Tuesday, July 13, 2010

POLICE ATTROCITIES AGAINST DEMONSTRATORS DEMANDING BASIC RIGHTS TO DALIT PEOPLE OF UTHAPURAM

உத்தப்புரம் பகுதியில் தலித் மக்கள் மீது நடத்தப்படும் பாகுபாட்டைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் காவல் துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் என். நன்மாறன், எ.கே.மகேந்திரன் மற்றும் மார்க்சிட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் படுகாயமடைந்தனர். பெண்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கியதோடு நில்லாமல், தலைவர்கள், தொண்டர்கள், பெண்கள் உட்பட 384பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தமுக்கம் மைதானத்தில் அடைக்கப்பட்டார்கள். அங்கு அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தப்புரத்தில் அரசு திறந்து விட்ட பொதுப்பாதையை தலித் மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும். நிழற்குடை அமைக்க வேண்டும், அரசமர வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி. சம்பத், மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், என்.நன்மாறன், கட்சியின் மாநகர் மாவட்டச்செயலாளர் இரா. அண்ணாதுரை, புறநகர் மாவட்டச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. ஜோதிராம், அருந்தமிழர் இயக்க மண்டலச் செயலாளர் குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர்கள் எம்.தங்கராஜ், எஸ்.கே.பொன்னுத்தாய், மாநில உதவித்தலைவர் கு.ஜக்கையன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. இராசகோபால், என்.முத்துஅமுதநாதன், சங்கரலிங்கம், கட்சியின் பேரையூர் தாலுகா செயலாளர் வி.முருகன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தலித் மக்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜிடம் தலைவர்கள் எடுத்துரைத்தனர். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல்துறை உதவி ஆணையர் தேன்மொழி ஆகியோர் உடனிருந்தனர். அரசு திறந்து விட்ட பாதையை தலித் மக்கள் பயன்படுத்தி வருவதாக மீண்டும், மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகரன் கூறினார். அதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுப் பாதையை பயன்படுத்துவதை தடுக்க வில்லை எனக்கூறிக் கொண்டே, எங்களை அன்று உத்தப்புரத்தில் வாகனத்தில் செல்ல விடாமல் காவல்துறை தடுத்தது என சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் குற்றம் சாட்டினார். ஆகவே, மீண்டும், மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் பொய் சொல்லக்கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த பல வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதுவரை 4 மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர். தான் நேரடியாக வந்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார். அதற்கு பதிலளித்த தலைவர்கள், உத்தப்புரத்திற்கு பல ஆட்சியர்கள் நேரடியாக வந்து பார்த்து நிழற்குடை அமைக்கவும், அரசமர வழிபாடு நடத்தவும் தலித் மக்களுக்கு அனுமதி வழங்கலாம் என அறிவித்துள்ளனர். அந்த கோப்புகளைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள். ஒவ்வொரு ஆட்சியரும் வந்து பார்த்து விட்டு நடவடிக்கை எடுக்காத நிலை தொடரக் கூடாது. இன்னும் எத்தனை காலம் தான் தலித் மக்கள் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டிருப்பார்கள் என வினா எழுப்பினர். இது குறித்து அதிகாரிகளிடம் பேசிவிட்டுக்கூட சொல்லுங்கள் காத்திருக்கிறோம் என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஆட்சியரிடம் கூறினார். அதன் பின் ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியர், பொதுப்பாதையில் தலித் மக்களை அனுமதிப்பது குறித்து காவல்துறை கண்காணிப்பாளருடன் பேசியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் அந்த நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற விஷயங்கள் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. உத்தப்புரம் சென்று விட்டு வந்துதான் பேச வேண்டும் என்றார். அது வரை நாங்கள் காத்திருக்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் உத்தப்புரம் சென்று விட்டு வரும் வரை வெளியே காத்திருக்கிறோம் என டி.கே.ரங்கராஜன் கூறி விட்டு தலைவர்களோடு வெளியேறினார்.

அதன் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமைதியான முறையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த மாநகர் காவல்துறை ஆணையர், எம்.பாலசுப்ரமணியன், தலித் மக்களின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் அடித்து வண்டியில் ஏற்றுங்கள் என உத்தர விட்டதும், காவல்துறையோடு சேர்ந்து கொண்ட அதிரடிப்படையினர் ஒவ்வொருவரையாக குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று தாக்க ஆரம்பித்தனர். தடுத்த பெண்கள் மீதும் கடுமையாகத் தாக்கினர்.


தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி. சம்பத்தை சூழ்ந்து கொண்ட காவல்துறையினர், அவர் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜை தூக்கி வந்து மிருகத் தனமாக தாக்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், என்.நன்மாறன் ஆகியோரை மக்கள் பிரதிநிதிகள் என்று பார்க்காமல் குண்டுக் கட்டாகத் தூக்கிச்சென்று பேருந்தில் எறிந்தனர் அதிரடிப்படையினர். காவல் துறையினரோடு, மப்டியில் வீடியோ எடுத்துக் கொண் டிருந்த காவலர் ஒருவரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்.


பெண்களை நடுரோட் டில் மானபங்கம் செய்வது போல தலைகீழாகத் தூக்கிச் சென்று ஆண் காவலர்கள் கேவலப்படுத்தினர். அத்துடன் அவர்களையும் தாக்கினர். இத்தாக்குதலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம். தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வேலம்மாள், முத்துராணி, முத்து பேயாண்டி,நல்லதங்காள், கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பால சுப்ரமணியன், பி.தேவி, செங்குட்டுவன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒவ் வொருவரையும் கைது செய்து குண்டு கட்டாகத் தூக்கி வந்த காவல்துறையி னர், பலரின் செல்போன் களை பறித்துக் கொண்ட னர்.காவல்துறை தாக்கு தலில் பி.சம்பத், சாமுவேல்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, செங்குட்டுவன் ஆகியோர் மயக்கமடைந்தனர்.


கடைசியாக டி.கே.ரங்கராஜன் எம்.பி மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்த போது, பெண்கள் அவரைக் கேடயம் போல சூழ்ந்துகொண்டு காவல்துறையினரின் தாக்குதலை தங்கள் மீது வாங்கிக் கொண்டனர். கடைசியாக அனைவரையும் அடித்து வாகனங்களில் ஏற்றிய காவல்துறையினர், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று டி.கே.ரங்கராஜனை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.



காவல்துறையினரின் இந்த திட்டமிட்ட வன்முறையால் மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட அப்பகுதி கலவர பூமி போல காட்சியளித்தது. செருப்புகள், பேனாக்கள், சில்லரை காசுகள் என அப்பகுதியில் சிதறிக்கிடந்தன. காவல் துறையினரின் இத்தாக்குத லைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் சென்று கதவுகளைத் தாழிட்டுக் கொண்டனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறை, அவர்களை தமுக்கம் மைதானத்தில் அடைத்தது. பலமணி நேரமாகியும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. பிற்பகல் 2.20 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் நல்லதங்காள், விருதுநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.

உண்ணாவிரதம்

முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறை அவர்களின் அங்க அடையாளம் உள்ளிட்டவற்றை எடுத்தது. அதன் பின் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற பட்டியலை தயார் செய்தது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பிற்பகல் 2 மணியளவில் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. ஆனால், அதை நிராகரித்து தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 6.10 மணியளவில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

டி.கே.ரங்கராஜனினி காலை பிடித்து இழுத்து செல்லும் போலீசார்

போராட்டத்தில் பங்குகொண்ட தலித் தலைவர் ஒருவரை கண்ணில் லத்தியால் குத்தும் போலீசார். கண் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார்.

-theekkadhir

No comments:

Post a Comment